தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானி போட்டி

நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் 26ஆம் திகதி

வடமாகாண மரநடுகை மாதத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் நடாத்திவரும் தாவராவதானிப் போட்டி இம்முறையும் நடைபெறவுள்ளது. இயற்கை எனது நண்பன் என்று இயற்கையை நேசித்த தமிழர் வாழ்வியல் இன்று இயற்கையில் இருந்து தூரவிலகிச் சென்றுகொண்டிருக்கிறது. இதுவே இன்றைய சூழற் பிரச்சினைகளுக்கெல்லாம் தலையாய காரணம். இதனைக்  கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் வகையில் தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானிப் போட்டியை நடாத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான இப்போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் (சட்டநாதர் ஆலயத்திற்கு அருகாமையில்) நடைபெறவுள்ளது.

தாவராவதானி போட்டியில் மாணவர்கள் மாத்திரம் அல்லாது பால், வயது வேறுபாடின்றி எவரும் முன்பதிவு இல்லாமல் கலந்துகொள்ளமுடியும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தாவராவதானி சான்றிதழோடு பரிசுகளும் வழங்கப்படும் எனவும், மேலதிக விபரங்கள் தேவைப்படின் 0775565460 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் எனவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்   தெரிவித்துள்ளது.