பத்திரிகையாளர் சந்திப்பு - Press Meet

சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைக்கூட

தமிழர்களிடம் விட்டுவைக்க அரசாங்கம் தயாராக இல்லை

மணிவண்ணன் கைது குறித்து ஐங்கரநேசன் கடுங்கண்டனம்


யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பயங்காரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் எண்ணங்களை முன்னெடுக்கவும் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கவும் முயன்றதாலேயே இவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். யாழ் மாநகர சபையில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களைக் கண்காணிப்பதற்கென உருவாக்கப்பட்ட பணிக்குழாமுக்கு வழங்கப்பட்ட நீலநிறச் சீருடைகள் விடுதலைப்புலிகளின் காவல் துறையின் சீருடைகளை ஒத்திருப்பதாகக் குற்றம் சாட்டியே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கை மாநகர சபைகள் சிலவற்றில் பணியாளர்கள் இதே நீலநிறச் சீருடைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மணிவண்ணன் அவர்களைக் கைது செய்ததின் மூலம் சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அற்ப அதிகாரத்தைக்கூட தமிழர்களிடம் விட்டுவைக்கத் தான் தயாராக இல்லை என்பதைப் பேரினவாத அரசாங்கம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மணிவண்ணன் கைது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று பொ. ஐங்கரநேசன் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடைகள் அவர்களுக்கே உரித்தான தனித்துவமான வரிகளை அடையாளமாகக் கொண்டவை. ஆனால், காவல்துறைக்கு அவர்கள் பயன்படுத்திய நீலநிறச் சீருடைகள் உலகப் பொதுவானவை. காக்கிச் சட்டைகள் மக்களின் மனங்களுக்கு அந்நியப்பட்டதாக உள்ளதால் மனங்களுக்கு மிகவும் நெருக்கமான உளவியல் நட்புமிக்க நீல நிறத்தைப் பெரும்பாலான நாடுகளில் காவல்துறையும் தனியார் பாதுகாப்புத் துறையும், இதர நிறுவனங்களும் சீருடைகளில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், யாழ் மாநகர சபை நீலநிறச் சீருடையைத் தெரிவு செய்ததைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயல்வதாக அரசாங்கம் சொல்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

உள்ளூராட்சிச் சபைகள் சுயாதீனமானவை. மாகாணசபைகளின் நிர்வாகத்தின்கீழ் இருந்தாலும் உள்ளூராட்சிச் சபைகளின் சுயாதீனத்தில் மாகாணசபைகள் தலையிடுவதில்லை. இந்நிலையில் மாகாணசபையின் கீழுள்ள மாநகரசபையின் சீருடை விடயத்தில் காவல் துறையின் மூலம் அரசாங்கம் தலையிடுவது அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது. சீருடையை வடிவமைத்த விடயத்தில் ஏதேனும் நிர்வாக ரீதியான முறைகேடுகள் இருப்பின் உள்ளூராட்சித் திணைக்களமே அதற்கான விசாரணையை மேற்கொள்ள முடியும். மாகாணசபைகள் இயங்காத நிலையில் ஆளுநர் இவ்விடயத்தில் தலையிட்டிருக்க முடியும். இதைத்தாண்டி பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இந்த விடயம் கையாளப்படுவதை அதிகாரப் பரவலைக் கோரும் சிறுபான்மை மக்களுக்குப் பேரினவாத அரசாங்கம் விடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கையாகவே கருத வேண்டும்.

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ்க் கட்சிகள் இதனை நியாயப்படுத்தக்கூடும். ஆனால், தங்களுக்கு இடையே முரண்பாடுகள், பிளவுகள் இருந்தாலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் யாவும் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைதுக்கு எதிராகவும் அவரின் விடுதலையை வேண்டியும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கராஜாக் காட்டுக்குள்ளும் சீன நிறுவனம்

சூழற்படுகொலையில் கோட்டா அரசாங்கம்

- பொ. ஐங்கரநேசன் கண்டனம்


இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது, இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்த்தேக்கங்களை அமைக்கும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. இவற்றை நிர்மாணிப்பதற்காகச் சீன நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. உலகின் உயிர்ப் பல்வகைமை மிக்க வெகுசில இடங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படும் சிங்கராஜாக் காட்டைச் சீர்குலைப்பது சூழற்படுகொலையே அன்றி வேறல்ல. இனப்படுகொலையாளிகளான இவர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே இல்லை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காடழிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ. ஐங்கரநேசன் இன்று செவ்வாய்க்கிழமை (23.03.2021) நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச அவர்களின் பிறந்த இடமான அம்பாந்தோட்டையின் வீரக்கெட்டிய நகரத்துக்கு ஜின் கங்கையில் இருந்தும் நிலவள கங்கையில் இருந்தும் தண்ணீர் கொண்டு செல்வதற்காகவே சிங்கராஜக் காட்டின் உள்ளே இரண்டு நீர்த்தேக்கங்களைக் கட்டும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சரும் ராஜபக்ச சகோதரர்களில் ஒருவருமான சமல் ராஜபக்ச அவர்கள் அழிக்கப்படும் காட்டுக்குப் பதிலாகப் புதிதாகக் காடு உருவாக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான வயதுடைய இந்தக் காட்டை எந்தப் புதிய காட்டாலும் ஈடுசெய்ய முடியாது.

இலங்கையின் மிகமுக்கிய பன்னிரு ஈரவலயங்களில் ஒன்றான நீர்கொழும்பின் முத்துராஜவெல கண்டற் சூழலும் அழிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த முத்துராஜவெல வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து இப்போது நகர அபிவிருத்திச் சபையிடம் கைமாற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் சரணாலயத்தின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டு தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. ஒருபுறம், ஏற்கனவே கொழும்பின் குப்பைகளால் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் முத்துராஜவெல ஈரநிலம், இன்னொரு புறம் அபிவிருத்தியின் பெயராலும் நிரப்பப்படவுள்ளது.

இலங்கையின் அரசியற் ஸ்திரத்தன்மை பற்றிக் கருத்திற் கொள்ளாமல் சீன சார்பு நிலையெடுத்து இலங்கையை வல்லரசுகளின் போட்டிக் களமாக்கியுள்ள அரசாங்கம் இப்போது இலங்கையின் சூழல் ஸ்திரத் தன்மையையும் சீர்குலைப்பதில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றது. இவை தென்னிலங்கைச் சம்பவங்கள் என்று நாம் பேசாது இருக்க முடியாது. இயற்கைச் சூழலுக்கு எல்லைகள் இல்லை. இவை தென்னிலங்கையை மாத்திரம் அல்ல; ஒட்டுமொத்த இலங்கையையும், உலகையும் பாதிக்கப்போகின்ற சூழற் பேரழிவுகள். இவற்றின் காரணமாகத் தென்னிலங்கையில் காடழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பேராட்டத்தை நாம் வரவேற்கிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பான நியாயப்பாடுளை ஏற்றுக் கொண்டவராகவோ, இனப்படுகொலைக்கு நீதி வேண்டுபவராகவோ, வடக்கு கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளச் சுரண்டல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவராகவோ இருந்தவர் அல்லர். ஆனாலும் சூழலியம் என்ற கோட்பாட்டைத் தேசியத்தின் ஒரு கூறாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள சூழற்படுகொலைக்கு எதிரான போராட்டத்துக்குத் தனது தார்மீக ஆதரவை வழங்குகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.