மூன்று தசாப்த காலத்துக்கும் மேற்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குப் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இச் சவால்களுக்கு முகங்கொடுத்தவாறே இயற்கைப் பேரிடர்களையும், பெருந்தொற்று நோய்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்களில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற, தொழில் வாய்ப்பிழந்த மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் அவசிய உதவி தேவைப்படுபவர்களை அடையாளங்கண்டு அவர்களினுடைய நலனை ஓம்புகின்ற பணியைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்து வருகிறது.


சிறுதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், கற்றலுக்கான உதவிகள் வழங்குதல், பேரிடர்க்கால நிவாரண உணவுப் பொதிகள் வழங்குதல் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவிகளை வழங்குதல் ஆகியனவற்றை நன்கொடையாளர்களின் உதவியோடு முன்னெடுத்து வருகிறது. எங்களுடன் கரங்கோர்த்து எமது சமூக நலனோம்புச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் கனிவான நன்கொடைக்குரிய பற்றுச்சீட்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வழங்கி வைக்கப்படும்.


Our people who are affected by over three decades of war, have been facing great challenges to return to normalcy. During this strenuous transition from war to normalcy, they are also being affected by natural disasters and pandemics. Tamil National Green Organization (TNGO) is working to identify families that need the extra support, families that live well below the poverty line, families that have lost their breadwinners and those families that are headed mainly by women.

With the support of our generous donors, we help promote small business ventures, provide learning aids, offer disaster relief dry ration packages and also assistance with emergency medical care. We kindly request you to join hands with us and support our Social Welfare Activities.

Receipts will be issued by Tamil National Green Organization for your kind donations.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் வவுனியா தச்சன் குளத்தில்

உலருணவு விநியோகமும் மரநடுகையும்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நேற்று வியாழக்கிழமை (23.12.2021) வவுனியா தச்சன் குளத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடர் காரணமாக தொழில்வாய்ப்பிழந்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே வவுனியாவின் தச்சன் குளப்பகுதியில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அக்கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அன்றைய தினம் இப்பகுதியில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியின்போது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், வவுனியா மாவட்ட இணைப்பாளர் கா.சோ.சிவநேசன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திருமதி வ. தேவிகா, உபதலைவர் சு. சுந்தரமூர்த்தி, செயலாளர் செ. விஜயரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்ததோடு, மரக்கன்றுகளையும் நடுகை செய்துள்ளனர்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால்

வேலணையில் உலருணவு விநியோகம்


தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் நேற்று 19.12.2021 (ஞாயிற்றுக்கிழமை) வேலணை, தாவடி, நாவற்குழி, மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற, தொழில்வாய்ப்பிழந்த மற்றும் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. இதனொரு கட்டமாகவே ஞாயிற்றுக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால்

சிறுப்பிட்டியில் குருதிக்கொடை முகாம்


தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் நேற்று சனிக்கிழமை (18.09.2021) சிறுப்பிட்டியில் இடம்பெற்றது. சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் வட பிராந்திய இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திரு. ம. பிரதீபன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு. த. ரவீனதாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கொரோனாப் பெரும் தொற்றுக்காரணமாக மருத்துவமனைகளுக்குச் சென்று குருதி வழங்குபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அவசர சிகிச்சைகளுக்குத் தேவையான குருதிக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கி விடுத்த அவசர வேண்டுகோளை ஏற்றுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கோப்பாய்த் தொகுதிக் கிளையால் சிறுப்பிட்டியில் குருதிக் கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இம்முகாமில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைப் பொதுச்செயலாளர் திரு. தா. யுகேஸ் அவர்கள் கலந்துகொண்டு பங்கேற்ற அனைவருக்கும் செவ்விரத்தம் பூச்செடிகளை வழங்கி வைத்தார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால்

கிளிநொச்சியில் உலருணவு விநியோகம்


கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில் வாய்ப்பிழந்த குடும்பங்களிலும், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இத்தகைய குடும்பங்களை அடையாளங்கண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் பணியைத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று செவ்வாய்க்கிழமை (07.09.2021) கிளிநொச்சி மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பளை, பரந்தன், பிரமந்தனாறு, தருமபுரம், கனகாம்பிகைக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி, சோயா மீற், பால்மா, தேயிலை ஆகியவை அடங்கிய இப்பொதிகளை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்துள்ளார்.

கொரோனாப் பெருந்தொற்று கடந்த ஆண்டு ஆரம்பித்த காலப் பகுதியில் இருந்து தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இப்பணியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

உலருணவுப் பொதிகள் விநியோகம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில்வாய்ப்பிழந்ததால் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாகத் தனிமைப் படுத்தப்பட்டதாலும், பல வாரங்களாக நாடு முழுமையாக முடக்கப்பட்டு இருப்பதாலும் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றிப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சித்திரைப் புத்தாண்டு தினத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.06.2021) நல்லூர் அரசடி, திருநெல்வேலி பிள்ளையார் வீதி, அரியாலை இராஜேஸ்வரி வீதி, கொக்குவில் கிழக்கு காளி கோவிலடி, உரும்பிராய் பழைய ஆஸ்பத்திரி வீதி, உரும்பிராய் பூதனார் கோவிலடி ஆகிய பகுதிகளிலுள்ள 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

கோண்டாவிலில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலர் உணவுகளை வழங்கியது


கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாகவும், தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியதன் காரணமாகவும் கோண்டாவில் கிழக்குப் பகுதியில் 25 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இக்குடும்பங்கள் விடுத்த வேண்டுகோள்களுக்கு அமைவாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நேற்று வியாழக்கிழமை (27.05.2021) அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் வழிகாட்டல்களுக்கு அமைவாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இப்பகுதிக்கு நேரடியாகச் சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.

இலங்கை முழுவதும் தற்போது முடக்க நிலையில் இருந்தாலும் அவ்வப்போது பயணத்தடை தளர்த்தப்படுவதால் பொது மக்கள் வெளியே சென்று தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூடியதாக உள்ளது. ஆனால், கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் வெளியே சென்றுவர முடியாததால் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால்

திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்துக்கு

உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு


கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாகத் தொடர்ந்து மூன்றாவது வாரமாக முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்துக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக இரண்டு வாரங்கள் பூரணமாக முடக்கப்பட்டிருந்த திருநெல்வேலி மத்தி - வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் முடக்கநிலை விலக்கப்பட்டுள்ளது. அதிக தொற்று அடையாளம் காணப்பட்டதால் பாரதிபுரம் பகுதியின் முடக்கம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. முடக்க நிலையை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் பொருட்டுக் காவல்துறையும் இராணுவமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

ஆயிரத்தி நூற்றி முப்பத்தாறு குடும்பங்களைக் கொண்ட திருநெல்வேலி மத்தி - வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் பாரதிபுரத்தில் 350 குடும்பங்கள் வரையில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் அன்றாடம் உழைக்கும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் தொடர்ச்சியான முடக்கம் இவர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக இப்பகுதிக் கிராம சேவையாளர் தெரிவித்ததையடுத்துத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் முதற்கட்டமாக நேற்று முன்தினம் (13.04.2021) 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் குருதிக்கொடை முகாம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் இன்று சனிக்கிழமை (20.03.2021) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ரூபிகா சேயோன் அவர்களின் தலைமையில் இரத்தவங்கிப் பிரிவினர் கலந்துகொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. மகேசன் கஜேந்திரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அவசர தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்குக் குருதிக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இரத்தம் வழங்கி உதவுமாறும் இரத்த வங்கி அவசர கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அரசியற் கட்சிகளுக்கு அரசியற் செயற்பாடுகளில் மாத்திரம் ஈடுபடாமல் சமூகத்தின் ஏனைய விடயங்களிலும் பங்கேற்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே குருதிக்கொடை முகாமை ஏற்பாடு செய்திருந்தோம். ஆர்வத்துடன் அனேகர் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியிருந்தார்கள். ஆனால், இவர்களிற் பலர் ஏற்கனவே குருதிக்கொடையில் ஈடுபட்டவர்கள். குருதிக்கொடை தொடர்பாகத் போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக புதிதாகக் குருதியை வழங்க வருகின்றனவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஒருவர் ஒருதடவை வழங்கும் 1பைந்து இரத்தம் 3 உயிர்களைக் காப்பாற்றக்கூடியது. உயிர் காக்கும் இந்த உன்னத பணி குருதியைக் கொடையாக வழங்குபவர்களுக்கும் பல்வேறு நன்மையைத் தரக்கூடியது. இது தொடர்பாக விழிப்புணர்வைச் சமூகத்தில் நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த முகாம்கள் அதற்கு வழிசமைக்கும். தொடர்ந்தும் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற முகாம்களைச் செய்யவுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

குருதிக்கொடை முகாமில் பங்குகொண்ட அனைவருக்கும் செவ்விரத்தம் பூச்செடிகள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வவுனியாவில் மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் விநியோகம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் வவுனியா மாவட்டப் பணிமனையால் மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம்பிரதாயபூர்வமாக இதன் தொடக்க நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.01.2021) பாவற்குளம் வாரிக்குட்டி ஊரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. சோ. சிவனேசன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்குக் குறிப்பேடுகளை வழங்கி வைத்தார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் மட்டக்களப்பில் மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் விநியோகம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையால் களுவாஞ்சிக்குடியில் எருவில் மற்றும் சூரையடி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் வழங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.01.2021) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திரு. இ. சூரியகுமார் அவர்கள் கலந்துகொண்டு குறிப்பேடுகளை வழங்கி வைத்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்

மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் விநியோகம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் ஆண்டுதோறும் கல்வியாண்டு முடிந்து புதிய வகுப்புகள் ஆரம்பிக்கும்போது பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் வழங்கும் பணி பல்வேறு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


2021ஆம் ஆண்டுக்கான குறிப்பேடுகளை மாணவர்களுக்கு வழங்கும் பணி கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை (17.01.2021) நல்லூரிலும், நேற்று சனிக்கிழமை (16.01.2021) நாவற்குழியிலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.01.2021) அன்று மல்லாகம் கல்லாரைக் கிராமத்திலும் மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இப்பணி மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக மாத்திரம் அல்லாமல் அவர்களிடையே சூழல் பாதுகாப்பு மற்றும் மரநடுகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கேற்ப குறிப்பேடுகள் அவற்றின் அட்டைகளில் விழிப்புணர்வுப் படங்களையும் மேற்கோள்களையும் தாங்கியவாறு தயாரிக்கப்பட்டுள்ளன. இக்குறிப்பேடுகளைத் தயாரிப்பதற்கான நிதி அனுசரணையை ரொறன்ரோவின் மனித நேயக் குரல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.